Published : 30 Mar 2023 05:47 AM
Last Updated : 30 Mar 2023 05:47 AM

அரசு விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்குமேல் பயணித்தால் 50% கட்டண சலுகை: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து மானிய கோரிக்கைமீதான விவாதம் நேற்று நடைபெற்றது.விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு, மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 6-வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நகரில் ரூ.3.55 கோடியில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் பாடியநல்லூரில் உள்ள பேருந்து பணிமனை மற்றும் பேருந்துநிலையங்கள் முறையே ரூ.10.76 கோடி, ரூ.5.43 கோடியில் மேம்படுத்தப்படும்.

விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென தனியாக 4 இருக்கைகள் ஒதுக்கப்படும். போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பணிமனைகளில் உள்ள பணியாளர் ஓய்வு அறைகளுக்கு ஏசி வசதிஏற்படுத்தப்படும். அரசு விரைவுபோக்குவரத்துக் கழக பேருந்துகளில் உள்ள பார்சல் பெட்டிகள், மாதம் ரூ.6 ஆயிரத்துக்கு வாடகை அடிப்படையில் இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும்.

இணையதளம் மூலம் 42 சேவை: சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்க ஏற்கெனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரத்துடன், மாநில அரசின் பங்காக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 54 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்த 145 இலகு ரக மோட்டார் கார் கொள்முதல் செய்யப்படும்.

ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வராமலேயே பொதுமக்கள் 42 சேவைகளை இணையதளம் மூலம் பெறநடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x