Published : 29 Mar 2023 07:38 AM
Last Updated : 29 Mar 2023 07:38 AM

காவிரியில் சட்டவிரோத மணல் குவாரிகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: கரூரில் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூரைச் சார்ந்த சாமானிய மக்கள் நலக் கட்சித் தலைவர் குணசேகரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால் அப்பகுதியில் ஆற்றில் 20 அடிக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்தப்பகுதி சீமைக் கருவேல புதர்கள் நிரம்பி, கப்பி மணல் திட்டுகளாக மாறியுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.

மணல் அரிப்பு ஏற்பட்டு கரூர் - நாமக்கல் ரயில்வே மேம்பாலம், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பாலங்களின் அடித்தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கரூர் ஆற்றில் மணல் குவாரிகள் அரசு விதிகளின்படியே நடந்து வருகின்றன. மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு வழிமுறைகளைப் பிறப்பித்து குவாரிகள் கண்காணிக்கப்படுகின்றன என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை, ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x