Published : 29 Mar 2023 04:28 AM
Last Updated : 29 Mar 2023 04:28 AM

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை தனி நீதிபதி குமரேஷ்பாபு நேற்று நிராகரித்து தீர்ப்பளித்தார்.

காலை 10.30மணிக்கு அவர் தீர்ப்பளித்து முடிந்ததும், உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் முறையீடு செய்தார். அதை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ்பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதியும் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களில் கூறியிருப்பதாவது:
உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

அப்பட்டமாக கட்சி விதிகள் மீறப்பட்டுள்ளதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தெரிவிக்கவில்லை. கட்சியில் இருந்து எங்களை நீக்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ளும் நீதிபதி, அதற்காக தடை விதிக்க முடியாது என மறுப்பது ஏற்புடையது அல்ல. தீர்ப்பு வந்த மறுநிமிடமே பழனிசாமி அவசர கதியில் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ளார்.

எனவே, மேல் முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, பொதுச் செயலாளராக பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x