Published : 27 Mar 2023 07:56 PM
Last Updated : 27 Mar 2023 07:56 PM

போலீஸால் சுடப்பட்டவருக்கான சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம்: கோவை காவல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: காவல் துறையினரால் சுடப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தாக்கல் செய்யப்பட்ட தெளிவற்ற ஆவணத்துக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை மாநகர காவல் ஆணையர் புதன்கிழமை நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய்ராஜாவின் காலில் குண்டடிப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கொலை வழக்கில் சரணடைந்தவரை சிறையில் அடைத்துள்ளதால் சட்டவிரோத காவலில் இருப்பதாக கருத முடியாது. ஆட்கொணர்வு மனுவில் சிகிச்சை மற்றும் விசாரணை குறித்த கோரிக்கைகளை முன்வைக்க முடியாது" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மனுதாரர் தரப்பில், "காலில் குண்டடிப்பட்ட நிலையில் கோவையில் அனுமதிக்கபட்டவரை கடலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், வாழ்வா சாவா என்ற நிலையில் இருப்பதாக" தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவர் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவர் இந்த நாட்டின் குடிமகன் இல்லையா? அவருக்கு சிகிச்சை பெற உரிமையில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். சிகிச்சை குறித்த விவரங்கள் பதில் மனுவில் இடம்பெராதது துரதிஷ்டவசமானது" என்று தெரிவித்தனர்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர், சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்த விவரங்கள் எனக் கூறி, தெளிவில்லாத இரண்டு பக்க நகலை நீதிபதிகளிடம் வழங்கினார். அந்த நகலைப் பார்த்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆய்வாளருக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் புதன்கிழணை ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், சஞ்சய் ராஜாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முறையான அறிக்கையை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர். கடலூர் சிறையில் உள்ள சஞ்சய் ராஜாவை அவரது தரப்பு வழக்கறிஞர் செவ்வாய்க்கிழமை சந்திக்க அனுமதியளித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x