Published : 27 Mar 2023 07:23 AM
Last Updated : 27 Mar 2023 07:23 AM

ஓமந்தூரார் மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு இலவச பரிசோதனை: நவீன கருவிகள் மூலம் சிசு வளர்ச்சியை அறியலாம்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு, 11-14 வாரங்களுக்கான சிசு வளர்ச்சி மருத்துவப் பரிசோதனைகள் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகின்றன.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் செயல்படுகிறது. இங்கு, ரூ.1,000 முதல்ரூ.4,000 வரையிலான கட்டணத்தில், பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

‘டபுள் மார்க்கர்’ சோதனை: தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அறியும் பரிசோதனைகள் இங்கு கடந்தஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. அதில், ரூ.1,000 மற்றும்ரூ.2,000 ஆகிய இரு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிசுவுக்கு மரபணு ரீதியான பாதிப்பு உள்ளதா என்பதை அறியும் ‘டபுள் மார்க்கர்’ சோதனை, மூக்கு எலும்பு, கழுத்து பகுதி, ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை அறியும் வளர்ச்சி பரிசோதனைகள் இங்கு செய்யப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகளால் இதுவரை 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர்.

100 கர்ப்பிணிகளுக்கு... இந்நிலையில், கருவில் உள்ள சிசுவின் நலன் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இலவசப் பரிசோதனை திட்டங்களை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்கிறது.

மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பேறுகால சிகிச்சை பெறும் 100 கர்ப்பிணிகளுக்கு, 11முதல் 14 வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் ஆரம்பநிலை சிசு வளர்ச்சிப் பரிசோதனைகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு சிசுவின் வளர்ச்சியை அறிவதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, மரபணுப் பரிசோதனைக்கான அனலைசர் பகுப்பாய்வு சாதனம் ஆகியவை ரூ.1.50 கோடியில் நிறுவப்பட்டுள்ளன. அனலைசர் கருவியில் உள்ள அதிநவீன மென்பொருள் கட்டமைப்பு மூலம், சிசுவுக்கு மரபணு ரீதியாக ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை துல்லியமாக அறிய முடியும். தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள ரூ.5ஆயிரம் வரை செலவாகும்.

மாநகராட்சி சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றதற்கான சான்றுகளுடன், அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் நேரடியாக வந்து,இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று ஓமந்தூரார் அரசுபன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x