Published : 25 Mar 2023 05:42 PM
Last Updated : 25 Mar 2023 05:42 PM

சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்ஃப்ளூயன்சா காய்சசல் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

காய்ச்சல் முகாமில் மா.சுப்பிரமணியன்

சென்னை: இன்ஃப்ளூயன்சா காய்சசல் தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தைப் பொறுத்தவரை இன்ஃப்ளூயன்சா வைரஸானது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஏற்பட்டிருக்கிறது. இந்த H3N1 என்கின்ற வைராஸானது இந்தியா முழுமைக்கும் பாதிப்பு ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது, அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக வைரஸ் காய்ச்சல்களுக்கான சிறப்பு முகாம் 10-ம் தேதி நடத்தப்பட்டது. இந்தக் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் 1000 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம் தொடர்ந்து நடைபெற்று, நேற்று (மார்ச் 24) மாலை வரை 33,544 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதில் 14,13,460 பேர் பயன்பெற்றுள்ளனர். 8775 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் படிப்படியாக குறைந்து வருகிறது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி இன்ஃப்ளூயன்சா காய்சசல் தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x