Last Updated : 23 Mar, 2023 03:04 PM

 

Published : 23 Mar 2023 03:04 PM
Last Updated : 23 Mar 2023 03:04 PM

புதுச்சேரியில் ரூ.50 கோடி மதிப்பில் சித்த மருத்துவக் கல்லூரி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ. 50 கோடியில் 5 ஏக்கரில் புதிய சித்த மருத்துவக்கல்லூரி இந்த நிதியாண்டில் துவங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு:

நேரு (சுயே): "அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, எம்ஆர்ஐ ஸ்கேன் இல்லாததை அரசு அறியுமா? இஎஸ்ஐ மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?" என கூறியுள்ளார்.

முதல்வர் ரங்கசாமி: "அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் புதுச்சேரி மட்டுமின்றி, அண்டை மாநில நோயாளிகளும் வருவதால் படுக்கை வசதி பற்றாக்குறை உள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் சரிசெய்ய முடியாத அளவு பழுதடைந்துள்ளது. புதிய கருவி வாங்க உள்ளோம்.

அதுவரை கதிர்காமம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்தை அந்த கார்ப் பரேஷனிடம் ஒப்படைக்கும் பரிந்துரையும் அரசிடம் உள்ளது" என்று கூறினார்.

நேரு: "அரசு மருத்துவமனையில் டாக்டர் பரிந்துரை இருந்தால்தான் படுக்கை வசதி கிடைக்கிறது. புதுச்சேரியில் நாலரை லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையை அணுகுகின்றனர். அங்கு கிளீனிக்தான் நடத்துகின்றனர். இதனால் தான் மருத்துவமனை அமைக்க கோருகிறோம்.

மருத்துவமனை அமைந்தால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நெரிசல் குறையும். இஎஸ்ஐ மருத்துவக் கல்லுாரி அமைக்கவும் கோருகின்றனர். மருத்துவக் கல்லுாரி அமைந்தால் மாநில மாணவர்களுக்கு மருத்துவ இடங்களும் கிடைக்கும்" எனக் கூறினார்.

முதல்வர் ரங்கசாமி: "இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தொழிலாளர்கள் விடுப்பு கடிதத்திற்குத்தான் செல்கின்றனர். மருத்துவமனைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். கூடுதல் இடம் தேவைப்படுகிறது. நிலத்தை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள இடத்தை கொடுக்க பரிசீலித்து வருகிறோம்.

இந்த நிதியாண்டில் ரூ.50 கோடியில் 5 ஏக்கர் பரப்பில் சித்த மருத்துவக் கல்லுாரி கொண்டுவர உள்ளோம். அந்த கல்லுாரிக்கும் அந்த பகுதியிலேயே நிலம் ஒதுக்க ஆலோசித்து வருகிறோம். இந்த மருத்துவமனைகள், கல்லூரி வரும்போது மருத்துவ பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும். அதற்கான நிலமும் தேவைப்படுகிறது" என முதல்வர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x