Last Updated : 13 Mar, 2023 02:31 PM

 

Published : 13 Mar 2023 02:31 PM
Last Updated : 13 Mar 2023 02:31 PM

வெயிலால் கருகிய வெள்ளை சாமந்தி பூக்கள் - ஓசூர் பகுதி விவசாயிகள் கவலை

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே கடும் வெயிலால் வெள்ளை சாமந்தி பூக்கள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், சூளகிரி பகுதிகளில் ரோஜா, சாமந்தி, செண்டு மல்லி மற்றும் பல்வேறு அலங்கார மலர்கள் ஆண்டு முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி பூக்கள் மட்டும் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதூர்த்தி உள்ளிட்ட விழாக்களை கருத்தில் கொண்டு சாமந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சாமந்தி பூக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பபடுகின்றன. .

இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதே போல் கடும் பனிப் பொழிவாலும் சாமந்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் பூக்கள் வரத்து குறைந்து விலை உயர்ந்தது. இது குறித்து கெலமங்கலம் அடுத்த முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மல்லன் என்கிற விவசாயி கூறும் போது, ''தங்கள் பகுதிகளில் பெரும்பாலும் வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி சாகுபடி செய்வது வழக்கம். இதில் மஞ்சள் சாமந்திக்கு அனைத்து சீசன்களிலும் நல்ல வேரவேற்பு உள்ளது.

வெள்ளை சாமந்திக்கு முக்கிய விழாக்கள் மற்றும் ஓணம் பண்டிகையின்போது மட்டுமே வரவேற்பு இருக்கும். மஞ்சள் சாமந்திக்கு கிடைக்கும் விலை, வெள்ளை சாமந்திக்கு கிடைப்பதில்லை. வெள்ளை சாமந்தி 3 மாதங்களில் பூத்து அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கருக்கு 1 டன் வரை மகசூல் கிடைக்கும். மாதத்திற்கு 4 முறை அறுவடை செய்வோம்.

இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ வெள்ளை சாமந்தி ரூ.20-க்கு விற்பனையானதால் அறுவடை மற்றும் ஏற்றுமதி கூலிக்கு கூட வருவாய் கிடைக்கவில்லை. இதனால், தண்ணீர் பாய்ச்சாமல் அப்படியே விட்டுவிட்டோம். தற்போது பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் மீண்டும் தண்ணீர் பாய்ச்சினோம் பூக்கள் நன்றாக விளைந்தது.

ஆனால், தற்போது கடும் வெயில் உள்ளதால், வெள்ளை சாமந்தி சுருங்கி, கருகியது. தரம் இல்லாததால் இந்த பூக்களுக்கு உரிய விலை கிடைக்காது என்பதால், அறுவடை செய்யமல் விட்டுள்ளோம். வெயில் இல்லை என்றால், இன்னும் 2 மாதம் அறுவடை செய்திருப்போம். வெயிலால் பூக்கள் வாடியதால் விளைச்சல் பாதித்து, இழப்பு ஏற்பட்டுள்ளது'' என கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x