Published : 13 Mar 2023 06:33 AM
Last Updated : 13 Mar 2023 06:33 AM

சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு: முதல்கட்டப் பணிகளை வரும் நிதியாண்டுக்குள் முடிக்க திட்டம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்கி,நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, 9 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், பல ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது.

இதுதவிர, அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், தெற்குரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, மாம்பலம், பூங்கா நிலையம், பெரம்பூர், பரங்கிமலை, சூலூர்பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய 15ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வேகோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் முதல்கட்டத்தில் 15 நிலையங்களில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவது தான் முக்கிய நோக்கம். 2-வது கட்டத்தில் மற்ற நிலையங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். ஒவ்வோர் நிலையத்துக்கும் ரூ.5 முதல் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தொழில்நுட்ப ஆலோசனையைபெறுவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 14 நிலையங்களுக்கு ஏற்பு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ஆலோசகர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள பெரும் திட்டங்கள் (மாஸ்டர் பிளான்கள்) இறுதிசெய்யப்படும் நிலையில் உள்ளன.

பெரும் திட்டங்களின் அடிப்படையில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் 2023-24-ம்நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x