Last Updated : 13 Mar, 2023 06:21 AM

 

Published : 13 Mar 2023 06:21 AM
Last Updated : 13 Mar 2023 06:21 AM

கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின் தென்மாவட்டத்துக்கு முதல் முறையாக வந்த பழனிசாமிக்கு கடும் எதிர்ப்பு

சிவகங்கை: கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் தென் மாவட்டத்தில் முதல் முறையாக நடந்த பொதுக்கூட்டத்துக்கு வந்த பழனிசாமிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11-ம் தேதி கூடி, இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்தது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வந்தது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் தங்களுக்குத்தான் ஆதரவு அதிகம் உள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த பிம்பத்தை உடைக்கவும்,தென்மாவட்டங்களும் தங்கள் வசம்தான் உள்ளன என்பதை நிரூபிக்கவும் பொதுக்கூட்டத்தைநடத்த அதிமுக தலைமை விரும்பியது.

இதற்காக சிவகங்கையைத் தேர்வு செய்த அதிமுக தலைமை, ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை பிரம் மாண்டமாக நடத்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரனுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சிவகங்கை சிவன் கோயில் அருகே பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதையறிந்த ஓபிஎஸ் தரப்பு, பொதுக்கூட்டம் நடக்கவிருந்த அதே இடத்திலேயே பால்குடம், திருவிளக்கு பூஜை நடத்த முடிவு செய்தது. மேலும் அதே நாளில் பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்தது.

இரு தரப்பினருக்கும் போலீஸார் அனுமதிதர மறுத்து விட்டனர். தொடர்ந்து இரு தரப்பினரும் உயர் நீதிமன்றத்தை நாடி, தனியார் இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்தவும், ஓபிஎஸ் தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி பெற்றனர்.

தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். மேலும் பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் களையும் சிலர் கிழித்தனர். பழனிசாமியைக் கண்டித்து பல இடங்களில் சுவரொட்டிகளையும் ஒட்டியி ருந்தனர்.

இதனால் அதிமுக தரப்பு கூடுதல் பாதுகாப்பு கோரி, உயர் நீதிமன்றத்தை மீண்டும் நாடியது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஓபிஎஸ் அணியினரின் எதிர்ப்பை அறிந்த அதிமுக தலைமை, வர வேற்பு நிகழ்வுகளை முற்றிலுமாக தவிர்த்து விட்டது.

தென்மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த பழனிசாமிக்கு எதிர்ப்புக் கிளம்பியதால், அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந் துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x