Published : 07 Mar 2023 04:11 PM
Last Updated : 07 Mar 2023 04:11 PM

2022-ல் அரசு மருத்துவமனைகளில் 18,000 பேருக்கு பக்கவாத சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு 18 ஆயிரம் பேருக்கு பக்கவாத சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரதாப் என்பவருக்கு வெற்றிகரமாக நுண்துளை மூலம் மூளையின் ரத்தநாளத்தில் உறைந்த ரத்தத்தை அகற்றி பக்கவாதம் இல்லாமல் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை நேரில் சந்தித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரத்தம் உறைதலினாலும் ரத்தம் கசிதலினாலும் பக்கவாதம் ஏற்படுவது என்பது இன்றைக்கு தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த பாதிப்புகள் ஏற்படுபவர்களுக்கு முதல் 4 மணி நேரம் மிக முக்கியமானதாகும். அந்த 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டால் அவர்கள் பக்கவாதத்திலிருந்து மீள முடியும்.

முதல்வரின் வழிகாட்டுதலின்படி கடந்த ஓர் ஆண்டுகளாக 78 அரசு மருத்துவமனைகளில் பக்கவாதத்திற்கு என்று பிரத்யேகமான சிகிச்சைகள் குறிப்பாக முதல் 48 மணிநேரத்தில் ரத்தம் உறைந்தோ, ரத்த கசிவு ஏற்பட்டோ, பக்கவாதம் ஏற்பட்டோ சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடி சிகிச்சை இன்றைக்கு மிகச் சிறப்பாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தான் அதிகமான அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளுக்கு கடந்தாண்டு மட்டும் ரத்தம் உறைதலினால் பக்கவாதம் என்னும் பாதிப்புகளுக்குள்ளாகி சிகிச்சைக்கு வந்தவர்களுடைய எண்ணிக்கை 14,784 பேர். மேலும், ரத்தம் கசிவினால் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு வந்தவர்களுடைய எண்ணிக்கை 4,858 பேர். இதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்து பக்கவாதத்திலிருந்து மீண்டவர்கள் 314 பேர். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, பக்கவாதத்தினால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 2019ம் ஆண்டு 98 பேரும், 2020 ஆம் ஆண்டில் 106 பேரும் இத்தகைய பக்கவாத பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தனர். முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாகவும், அதற்கான போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருந்ததின் விளைவாகவும் 2021 ல் 247 பேரும், 2022ஆம் ஆண்டு 314 பேரும் பக்கவாத பாதிப்புகளில் இருந்து மீண்டிருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x