Published : 04 Mar 2023 12:27 PM
Last Updated : 04 Mar 2023 12:27 PM

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வினோத்குமார் அவரிடம் இருந்த பணம் முழுவதையும் ஆன்லைனில் சூதாடி இழந்துள்ளார். கடன் வழங்கும் செயலிகள் மூலமாகவும் கடன் வாங்கி சூதாடியுள்ளார். சூதாடுவதற்காக எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்த அளவுக்கு ஆன்லைன் சூதாட்டம் கொடுமையானது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 44-வது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15-வது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்திற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விளக்கியுள்ளது. இனியும் தாமதிக்காமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்" என அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x