Published : 03 Mar 2023 01:26 PM
Last Updated : 03 Mar 2023 01:26 PM

மகாபாரதம் படியுங்கள்; தெளிவு பெறுங்கள் ஸ்டாலின் அவர்களே! - நாராயணன் திருப்பதி

சென்னை: ''மகாபாரதம் படியுங்கள்; தெளிவு பெறுங்கள் ஸ்டாலின் அவர்களே!'' என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''மகாபாரத்தில் சூதாட்டம் இருப்பதால்தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் ஸ்டாலின் அவர்களே. மகாபாரதத்தில் கவுரவ ராஜ்ஜியத்தில், பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்ற வாய்ப்பிருந்தும், கடமையை நிறைவேற்றத் தவறிய திருதராஷ்டிரன் இருப்பதால் தான் திமுக அரசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இருந்தும் தடை செய்ய மறுத்தீர்களா?

மகாபாரதத்தில் தவறு என்று தெரிந்தும், புத்திர பாசத்தால் துரியோதனன் செய்த அநியாயங்களை, முறைகேடுகளை அனுமதித்த திருதராஷ்டிரன் இருப்பதால் தான் உங்கள் அரசில் நடைபெறும் தவறுகளை, முறைகேடுகளை தட்டி கேட்க மறுக்கிறீர்களா? மகாபாரதத்தில் விதுரன் கூறிய நியாயத்தை, நீதியை ஏற்க மறுத்து உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் இருப்பதால்தான் தமிழக பாஜக சுட்டிக்காட்டும் நியாயத்தை, நீதியை ஏற்க மறுக்கிறீர்களா?

ஸ்டாலின் அவர்களே, மகாபாரதத்தை முழுமையாகக் கற்றறியுங்கள். நெறி தவறி, நீதிக்குப் புறம்பாக, தன்மக்களின் நலனுக்காக, நாட்டு நலனை உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் குறித்து அறிந்து கொள்ளுங்கள். திருத்திக் கொள்ளுங்கள். இராமாயணம் ஒருவர் 'எப்படி இருக்க வேண்டும்' என்று போதிக்கிறது. மகாபாரதம் 'ஒருவர் எப்படி இருக்கக் கூடாது' என்று போதிக்கிறது. மகாபாரதத்தை முழுமையாக படியுங்கள், தெளிவு பெறுங்கள் ஸ்டாலின் அவர்களே.'' இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x