Published : 03 Mar 2023 06:57 AM
Last Updated : 03 Mar 2023 06:57 AM

நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம்: தனியார் அமைப்பு மீது காவல் துறையில் புகார்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள கலையரங்கில் தனியார் அமைப்பு சார்பில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உட்பட 40 பேருக்கு போலிகவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ரவிக்குமார் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா கலையரங்கில் கடந்த 26-ம் தேதி சர்வதேச ஊழல் தடுப்புமற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சினிமா உட்பட பல்வேறுபிரபலங்களுக்கு விருது வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்த தனியார் அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் என்பவர் செய்திருந்தார்.

கடந்த நவம்பர் 10-ம் தேதிஹரிஷ் உள்ளிட்டோர் பல்கலைக்கழக அலுவலர்களை சந்தித்து ,பிப்ரவரி 26 -ம் தேதி கின்னஸ் சாதனைபடைத்தவர்கள், பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் இவ்விழாவை நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என்று கூறி ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட கடிதத்தை கொடுத்தனர்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் அவர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்கப்பட்டது. மாறாக அவர்கள் சினிமா பிரபலங்களான நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி உட்பட பல பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த நிகழ்வு சமூக வலைதளம் மற்றும் செய்திகளில் வெளியானது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். மேலும், அண்ணா பல்கலைக்கழக பெயர் மற்றும் லோகோவை சட்ட விரோதமாக பயன்படுத்தியது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் கேட்டபோது, அவர் ‘நான் எந்த கடிதமும் அளிக்கவில்லை, என்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்துள்ளனர்’ என தெரிவித்தார்.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மற்றும் லோகோ வையும், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பெயரையும் தவறாகபயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் இயக்குநர் ஹரிஷ் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஹரிஷ் மீது போலி ஆவணம் தயாரித்தல், நம்பிக்கை மோசடி உள்பட 7 பிரிவுகளின் கீழ்போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ’எனது கடிதம் மற்றும் கையெழுத்தை போலியாக தயாரித்து அதன் மூலம் அண்ணா பலைக்கலைக்கழகத்தில் விழாநடத்துவதற்கு மோசடியாக அனுமதி வாங்கியுள்ளனர். எனவேஹரிஷ் மற்றும் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x