Published : 02 Mar 2023 07:46 AM
Last Updated : 02 Mar 2023 07:46 AM

கோவில்பட்டி | மானியத்தில் உரம் பெற ஜாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி

உரம் மானியத்தை பதிவு செய்யும் பி.ஓ.எஸ். இயந்திரத்தில் ஜாதி பிரிவு தளம் சேர்க்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி: ரசாயன உரங்களின் தேவையும், விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு உரம் தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை உயரும்போது, ரசாயன உரங்களின் விலையும் அதிகரிக்கிறது. இதனால் அடியுரமான டி.ஏ.பி., மேல் உரமான யூரியா ஆகியவற்றை விவசாயிகளுக்கு மானியத்தில் அரசு வழங்கி வருகிறது.

அத்துடன், டி.ஏ.பி.யும், யூரியாவும் விவசாய பயன்பாடுபோக, பல்வேறு பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. இதனால், விவசாயப் பயன்பாடு என்ற போர்வையில் வணிக ரீதியான பொருட்கள் தயாரிப்புக்கும் அவை மானியத்தில் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவற்றின் விற்பனையைத் தீவிரமாக கண்காணிக்க அரசு முடிவெடுத்தது.

விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகலை சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் கொடுத்து, பி.ஓ.எஸ். எனப்படும் இயந்திரத்தில் கைரேகை பதித்து உரங்களைப் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் உண்மையான விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்கள் வழங்கப்படுவதால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 21.2.2023-ல் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு புதிய விதிமுறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் நகலுடன், தங்களது ஜாதி பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். பொதுப்பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., என்ற பிரிவுகளில் தங்களது வகைப்பாட்டை விவசாயிகள் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நேற்று உரக்கடைகளில் அரசின் மானிய விலையில் உரம் வாங்கச் சென்ற விவசாயிகளிடம் இதுகுறித்து கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து, கோவில்பட்டி கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “உரத்துக்கான மானியத்துக்கு ஜாதி வகைப்பாடு விவரம் கேட்கப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x