Published : 01 Mar 2023 03:26 PM
Last Updated : 01 Mar 2023 03:26 PM

கரோனாவால் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து | மதிப்பெண்ணுடன் கூடிய சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

கோப்புப்படம்

சென்னை: கரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய, மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், "கரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-2021 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது. மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை திரும்பப் பெற்று, 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். சிபிஎஸ்இ மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டங்களில் பயின்றவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில், ரயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769, குரூப் டி பணியிடங்களுக்கும், 40,889 தபால் துறை பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் வீல் தொழிற்சாலையில் 4,103 அப்பரன்டிஸ் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளில் சேர, பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம். எனவே, மதிப்பெண்ணுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், "ஏற்கெனவே இதே விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x