Published : 28 Feb 2023 04:13 AM
Last Updated : 28 Feb 2023 04:13 AM

பட்டியல் இன சாதிச்சான்று கேட்டு குறவன் இன மாணவர்கள் தர்ணா: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பட்டியல் இன ஜாதிச்சான்று கேட்டு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று தர்ணாவில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள். படம்: ந.சரவணன்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 25 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில், 50 சதவீதம் பேருக்கு பட்டியல் இன ஜாதிச் சான்று வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 50 சதவீதம் பேருக்கு பட்டியல் இன ஜாதிச்சான்று வழங்கப் படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்று வழங்காததால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் கூறி வந்தனர்.

சான்று கேட்டு விண்ணப்பித்தால் தங்களது மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி 200-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதை ஏற்காத மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, ‘‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் (திருத்தப்பட்ட) சட்டம் 1976 வரிசை எண் 36-ன் படி குறவன் இனத்துக்கான பட்டியல் இன சான்று கேட்டு விண்ணப் பிக்கும் விண்ணப்பங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும்போது, பெயரளவுக்கு 10 முதல் 15 பேருக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்கும் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் துறையினர் ஒட்டு மொத்த குறவர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பட்டியல் இன ஜாதிச்சான்று வழங்காமல் நிராகரித்து வருகின்றனர். தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் குறவன் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஜாதிச் சான்று கிடைக்காததால் பள்ளி மாணவர்களின் மேல்படிப்பு பாதிக்கப்படுகிறது. கல்லூரி யில் சேர்ந்து உயர்கல்வி பெற நினைக்கும் குறவன் இன மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே, குறவன் இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பட்டியல் இன ஜாதிச்சான்று வழங்கும் வரை தர்ணா போராட்டத்தை தொடர்வோம்’’ என்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த மாதம் கூட குறவன் இனத்தைச் சேர்ந்த 60 பேருக்கு ஜாதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஜாதிச்சான்று கேட்டு ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதற்கான ஆவணங்களை இணைத்தால், விரைவாக சான்று வழங்கப்படும். குறவன் இனத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கான ஆவணங்களை இணைக்காமல் பட்டியல் இன ஜாதிச்சான்று வழங்க வேண்டும் என கேட்டால் எப்படி வழங்க முடியும்.

இது பற்றி அந்த மக்களுக்கு விளக்கம் அளித்து வரு கிறோம். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’’ என்றார். குறவர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பட்டியல் இன ஜாதிச் சான்று வழங்காமல் நிராகரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x