Published : 28 Feb 2023 03:47 AM
Last Updated : 28 Feb 2023 03:47 AM

தமிழக பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் - பேரவைத் தலைவர் அறிவிப்பு

பேரவைத் தலைவர் அப்பாவு | கோப்புப்படம்

சென்னை: தமிழக அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தனியாக தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில், 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரும் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணிக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து, மார்ச் 28-ம் தேதி,2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை மற்றும் 2022-23-ம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கை ஆகியவற்றையும் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.

மார்ச் 20-ம் தேதி நிதிநிலைஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கும். மேலும், மானியக் கோரிக்கை உள்ளிட்டவை குறித்தும், வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்தும் அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும்.

பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பதிவு செய்தது தொடர்பாக அவை உரிமைக் குழு முடிவெடுக்கும்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குப் பின்னர்தான் நான் முடிவு எடுப்பேன் என்று எப்போதும் கூறவில்லை. சட்டப்பேரவை என்ஆளுகைக்கு உட்பட்டது. யார் - யாரை எங்கு அமர வைக்கவேண்டும் என்பது என் உரிமை. அந்த அடிப்படையில் சட்டப்பேரவையில் தகுதியான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினை சட்டப்பேரவையில் பேசி, இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முடிவடைந்த பிரச்சினை தொடர்பாக அவர்கள் (அதிமுக) மேலும் கோரிக்கை விடுக்க மாட்டார்கள். இவ்வாறு அப்பாவு கூறினார்.

மார்ச் 9-ல் அமைச்சரவை கூட்டம்: தமிழக நிதிநிலை அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம்அறிவிக்கப்பட உள்ளது. இதுதவிர, பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பழைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை மார்ச் 9-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களின் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x