Published : 23 Feb 2023 06:49 AM
Last Updated : 23 Feb 2023 06:49 AM

மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,942 கோடியில் 58 மருத்துவ கட்டிடங்கள்: அடுத்த வாரம் முதல்வர் தொடங்கி வைப்பதாக அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,942 கோடியிலான பணிகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் தொடங்கி வைக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 465 பேர் எம்பிபிஎஸ், 117 பேர் பிடிஎஸ் என மொத்தம் 582 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர்களுக்கு கையடக்க கணினிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, மதுரை, கோயம்புத்தூர், சேலம், நெல்லை, தஞ்சாவூர், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய 10 அரசு மருத்துவமனைகளின் தர மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்கு டீன், கண்காணிப்பாளரின் கீழ் மருத்துவமனை மேலாண்மை அலுவலர் உலக வங்கி திட்டத்தில் நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்பின்படி, மருத்துவமனை மேலாண்மையில் பட்ட மேற்படிப்பு முடித்த பட்டதாரிகள் 10 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்க, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பொன்னேரி, கொடைக்கானல், திருச்செங்கோடு, ஆவடி, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைகள், தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை ஆகிய 7 மருத்துவமனைகளுக்கு ரூ.14.70 கோடியில் புதிதாக சி.டி. ஸ்கேன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.1,942 கோடியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 58 மருத்துவக் கட்டிடப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x