Last Updated : 19 Feb, 2023 05:00 AM

 

Published : 19 Feb 2023 05:00 AM
Last Updated : 19 Feb 2023 05:00 AM

அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு - ஆதரவற்றோர் மூலம் நிதி குவித்த ஆசிரம நிர்வாகி

மரியா ஜூபின்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் காணாமல் போக, அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் அடித்து துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் அங்கிருந்த ஊழியர்களில் 7 பேரை கைது செய்துள்ளனர். ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆசிரமம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் களில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 பேர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 பெண்களும் அடங்குவர்.

தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் ஆட்சியர் பழனி முன்னிலையில் நேற்று மருத்துவமனைக்கு வந்து, ஆசிரமவாசிகளிடம் விசாரணை நடத்தினர்.

பாலியல் வன்கொடுமை: விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சன் கட்டார், “இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரிக்கிறது. நாங்கள் ஆணையத்திடம் அறிக்கை வழங்குவோம். காப்பகத்தில் இருந்த 2 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக நீதித்துறை நடுவரிடம் ஏற்கெனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தனர். எங்கள் விசாரணையில் அது உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்

அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி அன்பு ஜூபின் பேபி கேரளத்தைச் சேர்ந்தவர். இவர், 2005-ல் குண்டலபுலியூரில் ‘அறக்கட்டளை’ என்று பதிவு செய்து ஒரு சிறிய கட்டிடத்தில் அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி மனநலம் குன்றியோர், ஆதரவற்றவர்களை சேர்த்துள்ளார். ஆரம்பத்தில் சிறிய கட்டிடத்தில் இருந்த ஆசிரமம் அசுர வளர்ச்சியடைந்தது.

ஒரு கட்டத்தில் பண ஆசையில், இடப்பற்றாக்குறை, உயர் மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களைக் காட்டி இங்கிருந்தவர்களில் சிலரை கமிஷன் பெற்றுக் கொண்டு பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களில் உள்ள ஆசிரமங்களுக்கு அன்பு ஜூபின் பேபி அனுப்பி வைத்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நிதி: அன்பு ஜூபின் பேபி மூலம் பெறப்பட்ட ஆட்களைக் கொண்டு அந்த ஆசிரமத்தினர், தங்கள் ஆசிரமத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களை தங்க வைத்து பராமரித்து வருகிறோம் என்று கணக்கு காண்பித்து வெளிநாட்டில் இருந்து நிதியை பெற்று குவித்துள்ளனர். அந்த நிதியின் மூலமும் அன்பு ஜூபின் பேபிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைத் துள்ளது.

இதற்கு ‘கருணைப் பயணம்’ என பெயரிட்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கூடுதல் நலசிகிச்சை அளிக்க வெளி மாநிலத்துக்கு அனுப்புவதாக அழைப்பிதழ் வெளியிட்டும் அன்பு ஜூபின் பேபி நிதி குவித்துள்ளார்.

காவல்துறை விசாரணை: ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு, காணாமல் போனவர்கள் 11 பேர் என காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் சிலர் காணாமல் போனதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் எங்கே போனார்கள்? இவர்களிடம் இருந்து உறுப்புகள் திருடப்பட்டதா? என்று தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x