Last Updated : 18 Feb, 2023 08:23 PM

 

Published : 18 Feb 2023 08:23 PM
Last Updated : 18 Feb 2023 08:23 PM

கர்நாடக வனத்துறை சுட்டு கொன்ற மீனவர் உடல் பிரேதப் பரிசோதனை: மாதேஸ்வரன் மலைக்கு பேருந்து இயக்கம் நிறுத்தம்

தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு சோதனைச் சாவடி | கோப்புப்படம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டையில் ஈடுபட்ட தமிழக மீனவரை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, மாதேஸ்வரன் மலைக்கு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. சுட்டு கொல்லப்பட்ட மீனவர் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்து, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி, தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த மீனவர்கள் ராஜா (40), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) உள்பட 4 பேர், கடந்த 14-ம் தேதி இரண்டு பரிசல்களில் பாலாறு வழியாக சென்று மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா குண்டடிபட்டு உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை அடிபாலாறு ஆற்றில் ராஜா உடலை ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீஸார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். கர்நாடக வனத்துறையால் சுட்டு கொல்லப்பட்ட ராஜாவுக்கு பவுனா(35) என்ற மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

இச்சம்பவத்தால் தமிழக - கர்நாடக எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலை தடுக்கும் விதமாக, இருமாநில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் எஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீஸார் தமிழக எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தப்படுத்தியுள்ளனர்.

மேலும், சனிக்கிழமை சிவராத்திரி விழாவை முன்னிட்டு சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு செல்வது வழக்கம். மீனவர் கொலை சம்பவத்தால், மாதேஸ்வரன் மலைக்கு சேலம், ஈரோடு கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்குச் செல்வது தடைபட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் மீனவர் ராஜாவின் உடல் சனிக்கிழமை மாலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனையில் ராஜாவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். ராஜாவை சுட்டு கொன்ற கர்நாடக வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள ராஜாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, சேலம் மாநகர போலீஸார் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு ராஜாவின் உடல் அரசு மருத்துவனையில் பிரேதப் பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜா வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

அரசு மருத்துவர் கோகுலரமணன் தலைமையிலான குழுவினர் ராஜாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த நிலையில், இந்நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மருத்துவக் குழுவினர் அறிக்கை வந்த பின்னரே, ராஜா சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸ் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு சோதனைச் சாவடியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x