Published : 18 Feb 2023 11:36 AM
Last Updated : 18 Feb 2023 11:36 AM
சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. முன்னதாக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை சுரங்கப்பாதை வழியாக செயல்படுத்தினால் ரூ.8 ஆயிரம் கோடியும், உயர்மட்ட பாலம் வழியாக செயல்படுத்தினால் ரூ.6 ஆயிரம் கோடியும் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. முன்னதாக நேற்று (பிப்.17 ) மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது CMRL நிறுவனம். சிறப்பு" என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பாராட்டுகளைப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment