Published : 10 Feb 2023 11:48 PM
Last Updated : 10 Feb 2023 11:48 PM

‘‘தமிழகத்தில் கமிஷன், கலெக்சன், கரப்சன் ஆட்சி நடக்கிறது’’ - மதுரையில் பழனிசாமி குற்றச்சாட்டு

மதுரை: ‘‘தமிழகத்தில் கமிஷன், கலெக்சன், கரப்சன் ஆட்சி நடக்கிறது’’ என்று மதுரையில் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை வலையங்குளம் ‘ரிங் ரோடு அருகே மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா அக்கட்சி இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி முன்னிலையில் நடந்தது. டாக்டர் பா.சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா, கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி பேசியதாவது: அதிமுக மட்டுமே ஏழை மக்களுக்கு நன்மை செய்கிற கட்சியாக உள்ளது. சாதாரண தொண்டர் கூட அதிமுகவில் உச்சநிலைக்கு வர முடியும். தமிழகத்திலே இந்தியாவிலேயே எத்தனையோ அரசியல் கட்சிகள் உள்ளன. அந்த அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள், அக்கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் தயவில்தான் பொறுப்பிற்கு வர முடியும்.

ஆனால், அதிமுகவில் விசுவாசமாக இருக்ககூடிய தொண்டன் கூட கட்சியில் எந்த நிலைக்கும், ஆட்சியில் உயர்ந்த பொறுப்புகளுக்கும் வர முடியும். அதற்கு நானே சாட்சி. திமுகவை பொறுத்தவரையில் குடும்ப ஆட்சி நடக்கிறது. அதற்கு பல இயக்குனர் உள்ளனர். அவர்கள் கமிஷன், கலெக்சன், கரப்சனை துல்லியமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவில் அறிவித்த 85 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பொய்யை அடிக்கடி பேசி மெய்ப்பிக்க பார்க்கிறார். முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார். அவர் தேர்தல் நேரத்தில் அளித்த 90 சதவீதம் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. ஆனால், அவரது சக அமைச்சரகள் துதி பாடி மக்களை ஏமாற்றுகிறார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊழலை பற்றி கே.பழனிசாமி பேசுவதற்கு தகுதியில்லை என்கிறார். அப்படியென்றால் யார்தான் இவர்கள் செய்யும் ஊழலை பற்றி பேசுவது?

இந்தியாவிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக ஆட்சிதான். இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன. ஊழலுக்காக எந்த கட்சி ஆட்சியும் கலைக்கப்படவில்லை. ஐஎஸ்ஐ முத்திரை போல் திமுக அரசுக்கு ஊழல் முத்திரையை குத்தியிருக்கிறார்கள். ஊழல் என்று சொன்னாலே திமுகதான் ஞாபம் வருகிறது. ஊழலின் விதையை விதை்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அது தற்போது செடியாக மரமாக கிளைகள்விட்டு வளர்ந்து நிற்கிறது. அதனால், திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. இந்தியாவிலே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஸ்டாலின் கூறுகிறார்.

ஊழல் செய்வதில் வேண்டுமென்றால் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும். ஒரு சான்றிதழ் வாங்குவதாக இருந்தால் கூட லஞ்சம் கொடுத்துதான் வாங்க வேண்டிய உள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட விசாலசம் கொடுக்கப்பட்ட 8 பேர் தற்போது திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர். திமுகவில் அமைச்சராக யாருக்கும் தகுதியில்லையா?. உங்களால் யாரையும் உருவாக்க முடியவில்லை. திமுகவில் இரவு பகல் பராது உழைத்தவர்கள் வயது முதிர்ந்த சூழலிலும் முக்கிய பொறுப்புகளுக்கு வர முடியவில்லை. அவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். முக்கிய இலாக்காக்கள் திமுகவை சேர்ந்த சீனியர்களுக்கே கிடைக்கவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி, 5 கட்சிக்கு போய்விட்டு தற்போது திமுகவில் உள்ளார். ஒரே ஆண்டில் அவர் அதிமுகவில் இரட்டை இலை, திமுகவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார். இந்த அதிசயத்தை அவர் உருவாக்கியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் கிடையாது. அவர்களுகு்கு அதிமுக தொண்டர்கள்தான் குழந்தைகள். அந்த இரு தலைவர்களும் தமிழகத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. அந்த தலைவர்கள் மக்களை பற்றியே சிந்தித்தார்கள். திமுகவினர் அவர்கள் குடும்பத்தை பற்றி சிந்திக்கிறார்கள். அதிமுகவின் 33 ஆண்டுகள் ஆட்சி தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த ஆட்சிக்காலக்கட்டத்தில்தான் தமிழகம் முன்னேற்றம் பெற்றுள்ளது. நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x