Published : 10 Feb 2023 04:00 AM
Last Updated : 10 Feb 2023 04:00 AM

கோவை - நாகர்கோவில், மதுரை ரயில் சேவை மார்ச் 6-ம் தேதி வரை மாற்றம்

பிரதிநிதித்துவப் படம்

கோவை: மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை - நாகர்கோவில், மதுரை ரயில் சேவை வரும் மார்ச் 6-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தினமும் இரவு 7 மணிக்கு கோவை வந்தடையும் ரயில் (எண்: 16321), வரும் மார்ச் 6-ம் தேதி வரை விருதுநகர் - கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல, கோவையில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்:16322), வரும் மார்ச் 6-ம் தேதி வரை கோவை - விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில், விருதுநகரில் இருந்து நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும்.

கோவையில் இருந்து தினமும் மதியம் 2.40 மணிக்கு மதுரை புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்: 16721), வரும் மார்ச் 4-ம் தேதி வரை திண்டுக்கல் - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மதுரையில் இருந்து புறப்பட்டு தினமும் நண்பகல் 12.15 மணிக்கு கோவை வந்தடையும் ரயில் (எண்: 16722), மதுரை - திண்டுக்கல் இடையே மார்ச் 5-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரைக்கு பதில் திண்டுக்கல்லில் இருந்து கோவை புறப்பட்டு வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x