Published : 09 Feb 2023 06:22 AM
Last Updated : 09 Feb 2023 06:22 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | 83 வேட்புமனுக்கள் ஏற்பு: ஓபிஎஸ் அணி வேட்பாளர் உட்பட 38 பேரின் மனு தள்ளுபடி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில், 83 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி, 7-ம் தேதி நிறைவடைந்தது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 96 வேட்பாளர்கள், 121 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் தலைமையில் நேற்று நடந்தது. வேட்புமனுக்களில் உள்ள தகவல்கள், இணைப்பு படிவங்கள், சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவம், முன்மொழிவோரின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. இப்பணியை சில வேட்பாளர்களும் உடனிருந்து பார்வையிட்டனர்.

வேட்புமனு பரிசீலனையின் முடிவில், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனு உள்ளிட்ட 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன், அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் மற்றும் சுயேச்சை வேட்பாளர் மனுக்கள் உட்பட 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வாபஸ் பெற நாளை கடைசி: இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெற, நாளை (10-ம் தேதி) மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளதால், அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் தனது வேட்புமனுவை நாளை திரும்பப் பெறவுள்ளார். இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியிடப்பட உள்ளது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதியும் நடைபெறவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x