Last Updated : 19 Jan, 2023 04:26 PM

 

Published : 19 Jan 2023 04:26 PM
Last Updated : 19 Jan 2023 04:26 PM

கொலிஜியம் விவகாரத்தில் நான் கடிதம் அனுப்பியதை பிரச்சினையாக்குவது சரியல்ல: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

புதுச்சேரி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் விஷயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தை பலரும் தேவையில்லாமல் பிரச்சினை ஆக்குகின்றனர் என்று புதுச்சேரிக்கு வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வழக்கறிஞர்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இந்நிகழ்வில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மத்திய சட்டத்துறை அமைச்சர் பேசியது: "நீதிமன்றத்தில் அதிக நேரம் மக்கள் செலவிடக்கூடாது. நீதி விரைந்து தரப்படுதல் அவசியம். நீதிமன்றம் நவீனப் படுத்தப்பட வேண்டும். அதற்கு நீதிமன்றங்களில் தரமான 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். கடந்த 2014-ல் சான்றிதழ்களில் உயர் அதிகாரிகள் கையெழுத்து தேவையில்லை என்ற முறையை பிரதமர் நடைமுறைப்படுத்தினார்.

இது ஜனநாயகம். நீதித்துறை மக்களுக்கானது. நீதித்துறைக்கு அனைத்து வித ஒத்துழைப்பையும் அரசு தரும். உச்ச நீதிமன்ற நீதிபதி தொடங்கி அனைத்து நீதிபதிகளுக்கும் தெரிவிப்பது தன்னிச்சையாக நீதித்துறை செயல்படும் என்ற உறுதியைதான்.

நீதிபதிகள் நியமனம் பற்றிய கொலிஜியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். உச்ச நீதிமன்றம் உத்தரவை பின்பற்றியே தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். அது தொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது நிலையே தொடரும். நியமனத்தில் சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம். பலரும் தேவையில்லாமல் எல்லா விஷயங்களையும் பிரச்சினையாக்குகின்றனர்.

நீதி கிடைப்பது உறுதி செய்வதே எங்கள் எண்ணம். மக்களுக்கு விரைந்து கிடைக்க வேண்டும் என்பதே எண்ணம். நீதித்துறைக்கும், அரசுக்கு பிரச்சினை என்று கூறுவது தவறானது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து நேர்மறையான நடவடிக்கைகளைதான் எடுத்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "உள்ளூர் மொழியில் நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். தமிழில் வாதாடுவது சிறப்பாக இருக்கும். பல சிக்கல்கள் இதில் இருந்தாலும் மக்களுக்கு இது மிக உதவியாக இருக்கும். நீதித்துறையில் பணியாற்ற அதிகளவில் பெண்கள் வரவேண்டும்" என்று குறிப்பிட்டார்.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "புதுச்சேரி மாநில அந்தஸ்து தகுதி பெற தேவையான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க வேண்டும். சட்டத்துறை பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்." என்றார். விழாவில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ராமன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x