அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு: இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு: இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இரு தரப்பினரும் நேற்று எழுத்துப் பூர்வ வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ச்சியாக நடைபெற்றது.

விசாரணையில், பன்னீர் செல்வம், பழனிசாமி, அதிமுக அவைத்தலைவர் உள்ளிட்ட பலர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையி்ல், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

இதற்கிடையே அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி, நேற்றைய தினம் இரு தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in