Published : 06 Jan 2023 06:15 PM
Last Updated : 06 Jan 2023 06:15 PM

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜன.22-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் நேரில் ஆய்வு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: ஆணவக்கொலை செய்யப்பட்ட நாமக்கல் கோகுல்ராஜ் கடைசியாக இருந்த அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு ஜனவரி 22-ம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுவாதி தரப்பில், ஆஜரான சுவாதியின் கணவர், சுவாதி கர்ப்பமாக இருப்பதால் அவரால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை சுவாதி தவறாக வழிநடத்தியது உறுதியாகிறது. சுவாதி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

கோகுல்ராஜின் தாயார், அரசு, சிபிசிஐடி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீட்டுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதனிடையே, கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சிசிடிவியில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழி ஆகியவை குறித்து புரிந்து கொள்வதற்காகவும் வரும் ஜனவரி 22-ல் நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x