Published : 06 Jan 2023 06:52 AM
Last Updated : 06 Jan 2023 06:52 AM

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரி வழக்கு: ஜன.20-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசும், காவல் துறையும் ஜன.20-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்.2 காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது.

ஆனால் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களைத் தவிர்த்து மற்ற 41 இடங்களி்ல் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்குகள் அல்லது விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ள உத்தரவிட்டார். ஆனால் அதையேற்க மறுத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், அணிவகுப்பு பேரணியை ரத்து செய்தனர்.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

போலீஸ் அனுமதிக்கவில்லை: அப்போது ஆர்எஸ்எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.எல்.ராஜா, ரபு மனோகர் ஆகியோர் ஆஜராகி, “கடந்த முறை உயர் நீதிமன்றத்தி்ல் தெரிவித்தது போல ஜன.29-ம் தேதியன்று அணிவகுப்பு பேரணியை நடத்திக்கொள்ள மனு அளித்தும், இதுவரை போலீஸார் அனுமதி வழங்கவில்லை” என்றனர்.

அதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், “நிலுவையில் உள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி கோரியுள்ளனர். அவர்கள் சுதந்திரமான முறையில் விண்ணப்பம் அளிக்கவில்லை” என்றார்.

கோபமடைந்த நீதிபதிகள், “நீதிமன்றம் அதுபோல எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லையே” என்றனர். மேலும், அரசு தரப்பு வழக்கறிஞரிடம் “இதே நடைமுறைதான் எல்லா இயக்கங்களுக்கும் கடைபிடிக்கப்படுகிறதா அப்படியில்லை என்றால் நாங்களே உத்தரவிட நேரிடும்” என்றும் கூறினர்.

அதற்கு அரசு தரப்பில், “ஏற்கெனவே வால்பாறை திராவிட தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதிலளி்க்க அவகாசம் தேவை” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் ஜன.20-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x