Published : 03 Jan 2023 12:18 PM
Last Updated : 03 Jan 2023 12:18 PM

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்: ஜன.9 முதல் பொருட்கள் விநியோகம்

சென்னையின் டோக்கன் வழங்கிய ஊழியர்கள்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் (ஜன. 3) தொடங்கி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் குவிவதைத் தடுக்க ஜன.3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும், ஜன. 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் வாரியாகப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தெருவாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தினமும் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் (ஜன. 3) தொடங்கி உள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள், இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள டோக்கன்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x