Published : 28 Dec 2022 01:14 PM
Last Updated : 28 Dec 2022 01:14 PM

புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை சைதாப்பேட்டை 168 வது வார்டு நெருப்பு மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் ரூபாயை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (டிச.28) வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னை சைதாப்பேட்டையில் மாண்டஸ் புயலால் உயிரிழந்த லட்சுமி என்பவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 வயது குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார். உயிரிழந்த பெண்ணின் கணவர் மாற்றுத்திறனாளி என்பதாலும், ஏற்கனவே அவர் சைக்கிள் கடையில் கூலித்தொழிலாளியாக உள்ள நிலையில் சைதை திமுக சார்பில் அவருக்கு சைக்கிள் கடை வைத்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள், தியேட்டர்கள், திருமண நிகழ்வு, திருவிழாக்கள் போன்றவற்றில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை சுயகட்டுப்பாட்டுடன் மக்கள் பின்பற்ற வேண்டும். விழாக்கள் மகிழ்ச்சிக்காக தான் கொண்டாடப்படுகிறது. தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகள் பொதுமக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும்.

ஆனால் பிஎப்.7 உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவும் தன்மை உடையது என்பதாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது என்பதாலும் பொதுமக்கள் விதிகளை சுயகட்டுப்பாட்டுடன் முறையாக பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அதில் 2.60 லட்சம் டோஸ் கோவாக்சின், 40 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 60 வயது கடந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள், முன் களப் பணியாளர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மூக்கு வழியாக செலுத்தும் மருந்துக்கு 800 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடப்படும்." இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x