Published : 22 Dec 2022 06:08 AM
Last Updated : 22 Dec 2022 06:08 AM

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு: சென்னையில் டிச. 27-ம் தேதி தொடக்கம்

சென்னை: சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி உள்ளன.

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 26 தனியார் கல்லூரிகளில் 1990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில், சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்கி ஜனவரி 4-ம் தேதி வரை (டிசம்பர் 31, ஜனவரி 1, 2-ம் தேதிகளில் கலந்தாய்வு இல்லை) கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வரும் 27-ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரையும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரையும் நடைபெறுகிறது.

அதன் பின்னர், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுதொடர்பான விவரங்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x