Published : 19 Dec 2022 04:36 PM
Last Updated : 19 Dec 2022 04:36 PM

அண்ணாமலையை ஒருமையில் பேசிய கீதா ஜீவனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக: தமிழக பாஜக

நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்

சென்னை: “சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன், கடமை தவறி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் தொனியில் பேசியுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், பொது வெளியில் பொறுப்புள்ள கட்சித் தலைவர் ஒருவரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும்" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு, "சூடு, சொரணை இருந்தால் என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் ஏறுவோம்" என்று மிரட்டல் விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிகார மமதையில் ஒரு அமைச்சர், அரசியல் கட்சி தலைவர் ஒருவரை மேடையில் ஏறி தாக்குவோம் என்று கூறியிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து கொண்டிருப்பதற்கு காரணம் ஆளும் கட்சியும், அமைச்சர்களும்தான் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஏற்கெனவே, சில அமைச்சர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டுகொள்ளாத தமிழக அரசு, காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் பெண் அமைச்சரின் இந்த பேச்சுக்கு கைகட்டி, வாய் பொத்தி மவுனம் காப்பது முறையல்ல.

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன், கடமை தவறி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் தொனியில் பேசியுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், பொது வெளியில் பொறுப்புள்ள கட்சித் தலைவர் ஒருவரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும்.

இல்லையேல், சவால் விடுகிறேன், அவர் எந்த இடத்தில் அண்ணாமலையை மிரட்டினாரோ, நான் அதே இடத்தில் தமிழக பாஜக பொதுக்கூட்டத்தில், தமிழக அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள்,முறைகேடுகள் குறித்தும் மக்களிடையே எடுத்து சொல்கிறேன். அமைச்சர் கீதா ஜீவன் கூறிய அதே வார்த்தைகளின்படி, திமுகவினருக்கும் சூடு, சொரணை இருந்தால், தைரியம் இருந்தால் மேடையில் ஏறி பார்க்கட்டும். திமுக ஆண்டு கொண்டிருப்பது தமிழக என்ற மாநிலத்தைத்தான், ஆனால் பாஜக ஆள்வது இந்திய நாட்டை என்பதை திமுகவினர் மறந்துவிட வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x