Published : 18 Dec 2022 01:40 PM
Last Updated : 18 Dec 2022 01:40 PM

அன்னூருக்கு ஒரு நியாயம், பரந்தூருக்கு வேறு ஒரு நியாயமா முதல்வரே?- பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி 

பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம்

சென்னை: அன்னூருக்கு ஒரு நியாயம், பரந்தூருக்கு வேறு ஒரு நியாயமா முதல்வரே? என்று கேள்வி எழுப்பியுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, அன்னூர் பகுதி மக்களுக்கு நீதி கிட்டியது போல் பரந்தூர் பகுதி மக்களுக்கும் நீதி கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில், "அன்னூருக்கு ஒரு நியாயம், பரந்தூருக்கு வேறு ஒரு நியாயமா முதல்வரே? அன்னூரில் அமையவிருந்த டிட்கோ தொழிற்பேட்டைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துக்கூடாது என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அம்மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதே நடவடிக்கையை அனைத்து விஷயங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என கோருகிறோம்.அன்னூரைப் போலவே பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படப்போகும் விளைநிலங்களுக்கு எதிராக கடந்த 120 நாட்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

பரந்தூர் பகுதியை வடதமிழ்நாட்டின் உணவு களஞ்சியம் என்றே சொல்லலாம். சுமார் 3,000 ஏக்கர் விளை நிலமும், 1,000 ஏக்கர் நீர்நிலையுமாக உணவு உற்பத்தி நடைபெறும் நிலப்பரப்பை கையகப்படுத்தி விமான நிலையம் எற்படுத்தப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் நாளை (டிச.19) மாபெரும் பேரணியை ஒருங்கிணைத்துள்ளார்கள்.ஏகனாபுரம் கிராமத்தில் துவங்கி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணி செல்வதாக அறிவித்துள்ளனர். உணவு உற்பத்தியை பாதுகாக்க, சென்னையில் வெள்ளமும் வறட்சியும் ஏற்படக் கூடாது என்பதற்காக போராடிவரும் மக்களின் இந்த பேரணி வெற்றி பெறட்டும். அன்னூர் பகுதி மக்களுக்கு நீதி கிட்டியது போல் பரந்தூர் பகுதி மக்களுக்கும் நீதி கிடைக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளது.

கைவிடப்பட்ட அன்னூர் தொழிற்பேட்டை: முன்னதாக, கோவையில் தொழிற்பூங்கா அமைக்க நிலங்களை கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தொடர் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்து போராட்டங்களில் கலந்துகொண்டன.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசின் தொழிற்துறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x