Published : 16 Dec 2022 03:59 PM
Last Updated : 16 Dec 2022 03:59 PM

ஆவின் நிறுவனத்தின் மூடுவிழாவுக்கு திட்டமிட்டுள்ளதா திமுக அரசு? - அண்ணாமலை கேள்வி 

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது.

தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340-ல் இருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (டிச.16) முதல் அமலுக்கு வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குநர் சுப்பையன் ஐஏஎஸ் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களில் 3-வது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் நெய் ரூ. 515-ல் இருந்து ரூ.535 ஆகவும், ஜூலை மாதம் ரூ.535-ல் இருந்து ரூ.580 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த நவம்பர் மாதம் ஆவின் ஆரஞ்சு பால், ஜூலை மாதம் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x