Published : 16 Dec 2022 06:16 AM
Last Updated : 16 Dec 2022 06:16 AM
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளைத் தாமே தேர்வு செய்து மேற்கொள்ள அளிக்கப்பட்ட நிதி அதிகாரம் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தாமாக பணிகளைத் தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அதிகாரம் வழங்கப்பட்டு, உள்ளாட்சிகளில் முறையான மக்களாட்சி மலர வழிவகை செய்யப்பட்டது.
அப்போது கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 லட்சம் வரையும், ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.10 லட்சம் வரையும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் வரையும் பணிகளை உரிய தீர்மானம் மூலம் ஊராட்சிகள் தாமாகவே தேர்வு செய்து செயல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
அதற்கு பிறகு எந்த மாற்றமும் இல்லாமல் தற்போது வரை அதே நிதி அதிகாரம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தை தற்போது உயர்த்தி வழங்கி, உள்ளாட்சிஅமைப்புகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்பேரில் வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையின்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.25 லட்சம் வரையும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையும் தாமாகவேஉரிய தீர்மானம் நிறைவேற்றி பணிகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக ஊரக உள்ளாட்சியில் 3 அடுக்கு ஊராட்சி முறை நடைமுறையில் உள்ளது. ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய 37 மாவட்டங்களில் 79,395 குக்கிராமங்கள் அடங்கிய 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இடைநிலை அளவில் 388 ஊராட்சி ஒன்றியங்கள் அதாவதுவட்டார ஊராட்சிகள் உள்ளன. 36 மாவட்ட ஊராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘கடந்த 1996-ல் எல்.சி.ஜெயின்,1997-ல் கோ.சி.மணி தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்து, அதன் பரிந்துரைப்படி திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அதே உணர்வுடன் இப்போது ஊராட்சிகளுக்கு நிதிப் பகிர்வு அதிகாரங்களை அளித்துள்ளோம். அதிகார பரவலாக்கல் என்பதே, மக்களாட்சியில் மக்களுக்கான பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான திறவுகோல்’ என்று தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி துறை செயலர் பெ.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக ஊராட்சிகளில் திட்டங்கள், பணிகளுக்கான மதிப்பீடுகள், ஒப்பந்தங்களுக்கான வழிமுறைகள், நிபந்தனைகள் தயாரித்தல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிராம ஊராட்சிகளில், ரூ.5 லட்சம் வரையிலான பணிகளை அந்தந்த கிராமஊராட்சிகளும், ரூ.5 லட்சம் முதல்ரூ.50 லட்சம் வரையிலான பணிகளை மாவட்ட ஆட்சியர்களும், ரூ.50 லட்சத்துக்கு மேற்பட்ட பணிகளை ஊரக வளர்ச்சி இயக்குநரும் மேற்கொள்ளலாம்.
ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.25 லட்சம் வரையிலான பணிகளை ஊராட்சி ஒன்றிய குழுவும், ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான பணிகளை மாவட்ட ஆட்சியரும், ரூ.50 லட்சத்துக்கு மேற்பட்ட பணிகளை ஊரக வளர்ச்சி இயக்குநரும் மேற்கொள்ளலாம். மாவட்ட ஊராட்சிகளில் ரூ.50 லட்சம் வரையிலான பணிகளை மாவட்ட ஊராட்சியும், ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான பணிகளை ஆட்சியரும், ரூ.1 கோடிக்கு மேற்பட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குநரும் மேற்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment