Published : 16 Dec 2022 07:24 AM
Last Updated : 16 Dec 2022 07:24 AM

கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள், இளைஞர்களின் விளையாட்டு திறமையை மேம்படுத்துவதில் கவனம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்க உள்ள தேசிய அளவிலான ஏகலைவா உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சார்பில் பங்கேற்கும் மாணவர்களுடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்துரையாடினார். உடன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள், இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 ஏகலைவா பள்ளிகளில் 2,606 பேர் படிக்கின்றனர்.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தபோது, பழங்குடியின நலத் துறை பள்ளி மாணவர்களுக்கு பள்ளி, மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள், ரஷ்ய கிராண்ட் மாஸ்டருடன் விளையாடும் வாய்ப்பு பெற்றனர். போட்டியில் பங்கேற்ற 100 மாணவர்களும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு பெற்றனர்.

ஏகலைவா பள்ளிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் 2018-19-ல் நடந்த தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழகம் 6-வது இடம் பெற்றது. இதில்2 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை தமிழக மாணவர்கள் வென்றனர். 2019-20-ல் போபாலில் நடந்த போட்டியில் தமிழகம் 7-ம் இடம் பிடித்து, 9 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக போட்டி நடைபெறாத நிலையில், தேசிய அளவிலான 3-வது போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நாளை (டிச.17-ம் தேதி) தொடங்கி 22-ம் தேதி வரைநடக்க உள்ளது. இதில், 25 மாநிலங்களில் இருந்து 4,336 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து 94 மாணவர்கள், 83 மாணவிகள் என 177 பேர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இந்த மாணவர்களை தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று சந்தித்து,உரையாடினார். போட்டிகளில் வெற்றி பெற அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் உள்ள மாணவர்கள், இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, மேம்படுத்தவும், போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து கவனம் செலுத்தும்.

ஏகலைவா பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நவ.14-ம் தேதி முதல் டிச.13-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை சார்பில் சிறந்த பயிற்றுநர்கள் மூலம் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு நவீன தங்கும் வசதி, தரமான உணவு, பயிற்சி உபகரணங்கள் என பல வசதிகள் செய்து தரப்படுகின்றன. கபடி, கையுந்து பந்து, கோகோ, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கிடையில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி குறித்த ஆலோசனை கூட்டம் நேரு உள் விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, ‘‘தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 234 தொகுதிகளிலும் ‘மினி ஸ்டேடியம்’ அமைப்பதுதான் இளைஞர் நலன், விளையாட்டு துறையில் என் முதல் இலக்கு. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் என் பணிகள் இருக்கும். முதல்வர் தங்கக் கோப்பை அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போட்டிகள் ஜனவரியில் தொடங்கும். கடற்கரை (பீச்) ஒலிம்பிக் போட்டிகள், ஏடிபி டென்னிஸ் போட்டி ஆகியவற்றை தமிழகத்தில் நடத்த முயற்சித்து வருகிறோம். இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர்தான் அறிவிப்பார்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x