Published : 15 Dec 2022 05:57 PM
Last Updated : 15 Dec 2022 05:57 PM

போக்குவரத்து விதிமீறல்: அதிக முறை கேமராவில் சிக்குவோரை நேரில் அழைக்கும் சென்னை காவல் துறை

ஆலோசனைக் கூட்டம்

சென்னை: அதிக முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு கேமராவில் சிக்குபவர்களை நேரில் அழைத்து அறிவுரை வழங்கும் நடைமுறை சென்னை காவல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 சந்திப்புகளில் 15 ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து E- Challan போர்ட்டல் உதவியுடன் தானியங்கி E-Challan முறையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது ஏப்ரல் 1, 2022-இல் நடைமுறையில் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்வது, மூன்று நபர்கள் பயணம் செல்வது மற்றும் சாலையில் தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டுவது போன்ற விதிமீறல்களை இந்த கேமரா பதிவு செய்கிறது.

இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், கேமராவில் பலமுறை படம்பிடிக்கப்பட்டால், அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதிக முறை போக்குவரத்து விதிகளை மீறி கேமராவில் சிக்கியவர்களில் 69 பேருக்கு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி 14-ம் தேதி கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையர் ஜூலியஸ் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 35 பேர் கலந்து கொண்டனர் இதில் 6 பேர் தங்களது அபராத தொகையான 4200 ரூபாயை பேடிஎம் மூலம் செலுத்தினர். மற்றவர்கள் விரைவில் அபராத தொகை செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறித்தும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதும், திருத்தி அமைக்கப்பட்ட அபராத தொகையை கருத்தில் கொண்டு வாகனத்தை இயக்கி, சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இனி வரும் காலங்களில் வாரம்தோறும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x