Published : 14 Dec 2022 12:31 PM
Last Updated : 14 Dec 2022 12:31 PM

முதல்வர் கோப்பை கபடி போட்டி நடத்த ரூ.47 கோடி: கோப்பில் கையெழுத்திட்டார் அமைச்சர் உதயநிதி

கோப்பில் கையெழுத்திட்ட உதயநிதி ஸ்டாலின்

சென்னை: முதல்வர் கோப்பை கபடி போட்டி ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து, அதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

உதயநிதி ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன்படி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2022-23ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி நடத்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன்படி முதல்வர் கோப்பை நடத்த ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது, “ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022-23ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டத்தினைச் சேர்த்திடவும், முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே
10 விளையாட்டுக்களில் மாநில போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெறும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி, 16 பிரிவுகளில் போட்டிகள் நடத்திடும் வகையிலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை ரூ.47,04,72,800/- (ரூபாய் நாற்பத்தேழு கோடியே நான்கு இலட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எண்ணூறு) செலவில் நடத்திடவும், இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைத்திட கோரும் கோப்பில் கையொப்பமிட்டார்.

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்:

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கபடி விளையாட்டு வீரர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எச். ஜாஃபர், திரு. கே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த
ஏ. கிறிஸ்டோபர், வலுதூக்கும் வீரர்கள் (Power lifting) சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்சடையன், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ஜெகநாதன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். குத்தாலிங்கம், பளுதூக்கும் வீரர் (Weight lifting) திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த .வி. கோவிந்தராஜ், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர் ஏ.எல். கலீல்ரகுமான், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் எஸ். சிவராஜன் ஆகிய ஒன்பது விளையாட்டு வீரர்களுக்கு 1.3.2022 முதல் 1.8.2022 வரை மாதம் ரூ.3000/- ஓய்வூதியம் வழங்குவதற்கும், 2.8.2022 முதல் ஆயுட்காலம் வரை மாதம் ரூ.6000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.

துப்பாக்கிச்சுடும் வீராங்கனை செல்வி நிவேதிதா அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை:

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (International Shooting Sports Federation) சார்பில் பெரு நாட்டின், லிமா நகரில் 27.9.2021 முதல் 10.10.2021 வரை நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீட்டர் Standard Pistol பெண்களுக்கான தனிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி நிவேதிதாவிற்கு 4 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x