Published : 14 Dec 2022 03:48 AM
Last Updated : 14 Dec 2022 03:48 AM

ரூ.12.26 கோடியில் சேலத்தில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடியில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இங்கு பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம், கப் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் நிறுவனம், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், கிராம அளவில் 9,367 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் என்ற 3 அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, தமிழகம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பாலை நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

பால் மட்டுமின்றி, பால் உப பொருட்களான தயிர், மோர், லஸ்ஸி, வெண்ணெய், நெய், பனீர், பால்கோவா, யோகர்ட், பால் பவுடர், நறுமணப் பால் வகைகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்ஃபி, சாக்லேட், குக்கீஸ் வகைகளையும் நுகர்வோருக்கு ஆவின் நிறுவனம் விநியோகித்து வருகிறது.

சென்னை அம்பத்தூர் பால் உப பொருட்கள் பண்ணையில் தினசரி 15 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி திறனுடன் சுமார் 84 பால் உப பொருட்கள், 146 வகைகளில் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. மதுரையில் தினசரி 30 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 14-ம் தேதி திறந்து வைத்தார். அதன்மூலம், பல்வேறு வகை சுவைகளில் குல்ஃபி ஐஸ்கிரீம், கோன் ஐஸ்கிரீம், கப் ஐஸ்கிரீம் ஆகியவை தயாரிக்கப்பட்டு, தென்மாவட்டங்களில் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, வளர்ந்து வரும் ஐஸ்கிரீம் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்களிப்பை அதிகப்படுத்தவும், கூடுதல் லாபம் ஈட்டி பால் உற்பத்தியாளர்களின் நலன் காக்கவும், சேலம் பால் பண்ணை வளாகத்தில், தினசரி 6 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறனுடன் ரூ.12.26 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், துறை செயலர் ஆ.கார்த்திக், பால் உற்பத்தி, பால் பண்ணை மேம்பாட்டு துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், நிர்வாக இணை இயக்குநர் கே.எம்.சரயு ஆகியோர் பங்கேற்றனர்.

சேலம் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை மூலமாக, 50, 100,500 மி.லி., 1 லிட்டர் அளவுகளிலும், நுகர்வோரின் தேவைக்கேற்ற அளவுகளில் ஐஸ்கிரீம் சிப்பமிடும் (பார்சல்) வசதிகளுடன், பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம், கப் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் நுகர்வோருக்கு தரமாகவும், தடையின்றியும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x