Published : 14 Dec 2022 04:27 AM
Last Updated : 14 Dec 2022 04:27 AM

15,000 குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெறும் நிலையில் புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை சந்தை அமைக்கப்படுமா?

கோவில்பட்டி: தமிழகத்தில் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் இருந்து வருகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட வானம்பார்த்த பூமியான புதியம்புத்தூரில் குடிசை தொழில் போல் எங்கு திரும்பினாலும் ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெறுகிறது.

சுமார் 300 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஆயத்த ஆடை தயாரிப்புக்கு தேவையான மொத்த ஜவுளி கடைகள், பட்டன், நூல் கண்டுகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இங்கு அதிகம் உள்ளன. இதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றன.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், தையல் பயிற்சி பள்ளி,ஆயத்த ஆடை உற்பத்திக்கு மானியத்தில் மின்சாரம், சில்லாநத்தம் கிராமத்தில் ரயில் நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

ரயில் நிலையம்: இது குறித்து புதியம்புத்தூர் ரெடிமேட் உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.ஜெகதீசன் கூறியதாவது: சூரத்தில் இருந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்கிறோம். அவசர தேவைகளுக்கு மட்டுமே சென்னை, மதுரை, பெங்களூரூ போன்ற நகரங்களில் துணிகள்வாங்குகிறோம். இதனால் மாதம்முழுவதும் சூரத் செல்வது, வருவது என எப்போதும் ரயில் பயணத்தில் இருப்போம். தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை இருப்பு பாதை வழித்தடத்தில் சில்லாநத்தத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

மேலும், ஆயத்த ஆடை பூங்கா என்பதை ஆயத்த ஆடைசந்தையாக மாற்றித் தரும்படி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருவதாக அவரும் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வாரந்தோறும் சந்தை கூடுவது வழக்கம். அதேபோல், இங்கு சுமார் 300 கடைகள் வரை கட்டி சந்தை அமைத்தால் உற்பத்தியாளர்களுக்கும், வெளியூர் வியாபாரிகளுக்கும் விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய எளிதாக இருக்கும் என்றார்.

ஆரி வேலைப்பாடு: ஆயத்த ஆடைகளில் தற்போது ஆரி வேலைப்பாடுகள் என்ற ஆடை அலங்கார பணிகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஆரி வேலைப்பாடுகள் செய்து வரும் பட்டுராஜ் என்பவர் கூறும்போது, “ஆரி வேலைப்பாடுகள் என்பது நூல் கோக்காமல் ஊசி மூலம் நூல் எடுத்துச் செய்வது. தற்போது நவீன காலத்துக்கு ஏற்ப அனைத்தும் மாறிவிட்டன. திருமணம், திருவிழாக்களில் பங்கேற்க பெண்கள் அதிகம் ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை தான் தேர்வு செய்கின்றனர்.

பட்டுப் புடவை, காட்டன் புடவை மற்றும் சுடிதாரில் அவற்றின் நிறம், டிசைனுக்கு ஏற்ப ஆரி வேலைப்பாடுகள் செய்ய ரூ.1,300 முதல் ரூ.50,000 வரை வாங்குகிறோம். ஆரி வேலைப்பாடுகளுக்கு இங்கு தொழிலாளர்கள் இல்லாததால், மேற்குவங்க தொழிலாளர்களை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இங்கு ஆயத்த ஆடை சந்தை அமைக்க வேண்டும். மின்சார மானியம் வழங்கினால் ஆயத்த ஆடை தொழில் அடுத்த கட்டத்துக்கு செல்லும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x