Published : 12 Dec 2022 05:50 AM
Last Updated : 12 Dec 2022 05:50 AM

உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் சிலையை திறந்துவைத்தார் ஸ்டாலின்

பாரதியார் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உத்தர பிரதேச மாநிலம் காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு இல்லத்தையும், பாரதியாரின் மார்பளவு சிலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். மேலும், பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிச.11-ம் தேதி பிறந்த பாரதியார், மக்களிடம் விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்தும் பல பாடல்களை இயற்றினார். சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, பால பாரதம் போன்ற பத்திரிகைகள் மூலம் கட்டுரை, கவிதைகளை எழுதி, மக்களின் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை வளர்த்தார். பெண் விடுதலை தொடர்பாக அவர் எழுதிய பாடல்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவை.

தாய்மொழியாம் தமிழை தெய்வமாகப் போற்றிய மகாகவி பாரதியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக கடந்த ஆண்டு செப். 11-ம் தேதி `பாரதியின் நினைவு நாள் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும், பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும், காசியில் அவர் வாழ்ந்த வீடு புனரமைக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும்’ உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, உத்தர பிரதேச மாநிலம் காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, வீட்டின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, வீட்டின் ஒரு பகுதி ரூ.18 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, அதில் பாரதியின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.

மேலும், அந்த நினைவு இல்லத்தில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்கள், வாழ்க்கை குறிப்பு, அவரது படைப்புகளுடன் சிறு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் புனரமைக்கப்பட்டுள்ள நினைவு இல்லத்தையும், அங்கு நிறுவப்பட்டுள்ள பாரதியாரின் மார்பளவு சிலையையும் முதல்வர் ஸ்டாலின்சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். மேலும், மகாகவி பாரதியார் குறித்த குறும்படத்தைப் பார்வையிட்ட முதல்வர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரைவெளியிட்டார். இந்த மலரை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பங்கேற்றார். காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா.செல்வராஜ், வாரணாசி கூடுதல் ஆட்சியர் குலாப் சந்திரா, பாரதியாரின் தங்கை மகன் கேதார வெங்கட கிருஷ்ணன், தங்கை மகளின் மகன் ரவிக்குமார், மகள்கள் ஆனந்த சீனிவாசன், ஜெயந்தி முரளி, மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் மு.பா. அன்புச்சோழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x