Published : 11 Dec 2022 07:52 AM
Last Updated : 11 Dec 2022 07:52 AM

சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பேர் உயிரிழப்பு

சென்னை: மழைநீரில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி(40). குடிசை வீட்டில் தனது மகள்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை முழுவதும் பலத்த மழை பெய்துவந்தது. பல்வேறு இடங்களில்குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கனமழை மற்றும் புயலால் தனது வீட்டிலேயே இருந்தால் ஆபத்து என கருதியலட்சுமி, தனது மகள்களுடன் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் சென்று தங்க முடிவு செய்தார்.

லட்சுமி தனது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) என்பவருடன் அப்பகுதியில் தேங்கி இருந்த மழைநீரில் நடந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த லட்சுமி மீது மின்சாரம் பாய்ந்தது. கீழே விழுந்த அவரை கண்ட ராஜேந்திரன் காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீஸார், மின் இணைப்பை துண்டித்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இருவரின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் உயிரிழப்பு: இதேபோல், தாம்பரத்தை சேர்ந்த வினோத்(35). துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற அவர், அலுவலகத்தின் 2-வது தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதிகளவில் காற்று வீசியதால், திறந்திருந்த அலுவலக ஜன்னலை மூட முயன்றார். அப்போது வீசிய காற்றில் ஜன்னல் கண்ணாடி உடைந்து, அவரது உடலில் குத்தி அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x