Last Updated : 10 Dec, 2022 04:51 PM

9  

Published : 10 Dec 2022 04:51 PM
Last Updated : 10 Dec 2022 04:51 PM

திமுகவில் சேர்க்க மறுப்பு: மீண்டும் பாஜகவுக்கு திரும்பும் முனைப்பில் சரவணன் - கட்சியினர் எதிர்ப்பு

மதுரை: திமுகவில் சேர்க்க மறுத்துவிட்டதால் மீண்டும் பாஜகவுக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மதுரை டாக்டர் சரவணன். இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர் டாக்டர் சரவணன். இவர் பாஜகவுக்கு வருவதற்கு முன்பு திமுக, மதிமுக, பாஜகவுக்கு போய்விட்டு மீண்டும் திமுகவில் சேர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏவானார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுகவில் சீட் கொடுக்காததால் மீண்டும் பாஜகவில் சேர்ந்து மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரானார். தேர்தலில் தோற்றாலும் நகர் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அன்று இரவே அமைச்சரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்த சரவணன், பின்னர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். அதன் பிறகு பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்.

அப்போதிலிருந்து திமுகவில் சேர அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் மூலம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரை திமுகவில் சேர்க்க மதுரை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர்கள் 3 பேரும் சம்மதிக்கவில்லை.திமுகவில் எம்எல்ஏவாகி, பாஜகவில் இணைந்து திமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்த சரவணனை மீண்டும் திமுகவில் சேர்க்கவே கூடாது என மாவட்ட செயலாளர்கள் திமுக தலைமையிடம் தெரிவித்துவிட்டனர். தமிழக முதல்வரின் உறவினர் மூலம் திமுகவில் சேரவும் முயன்றார். அதும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அடுத்து வரும் எம்.பி தேர்தலை மனதில் வைத்து டாக்டர் சரவணன் மீண்டும் பாஜகவிலேயே சேர்ந்து விடலாம் என முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பாஜகவின் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் ஷா மூலம் பாஜகவில் சேர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக சரவணன் சென்னையில் முகாமிட்டு பாஜக தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இதனிடையே, சரவணனை மீண்டும் பாஜகவில் சேர்க்க மதுரை பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாஜகவினர் தங்களது ஃபேஸ்புக் பக்கங்களில் சரவணனை பாஜகவில் மீண்டும் சேர்க்கக்கூடாது என கருத்துகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். கட்சி மேலிடத்துக்கும் புகார் அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து பாஜகவினர் சிலர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு சரவணன் மதுரையில் தனது மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்தினார். அப்போது பாஜக தலைவர்கள் தவிர்த்து மற்றக் கட்சித் தலைவர்களை அவர்கள் சார்ந்த கொடியுடன் வரவேற்று சரவணன் பேனர் வைத்திருந்தார்.

பாஜகவில் இருந்து விலகிய பிறகு அவர் அளித்த பேட்டிகளில் பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகத்தை விமர்சனம் செய்தார். இவற்றை மேலிடத்துக்கு தெரிவித்துள்ளோம். சரவணன் பாஜக தலைவராக இருந்தபோது கட்சியினரை மதித்து செயல்படவில்லை. பழைய நிர்வாகிகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டனர். அவருக்கு நெருக்கமானவர்களை நிர்வாகிகளாக நியமித்தார். அவர் மீண்டும் பாஜவுக்கு வந்தால் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x