Published : 15 Nov 2022 06:13 AM
Last Updated : 15 Nov 2022 06:13 AM
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், பெயர் சேர்க்க மட்டும் 4.44 லட்சம் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த நவ.9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நவ.9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பம் பெறப்படும். இந்த காலகட்டத்தில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் விவரங்கள் அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
முதல்கட்ட சிறப்பு முகாம்
இந்நிலையில், பணிக்கு செல்வோர் வசதிக்காக, இந்த மாதத்தில் 4 நாட்கள் அதாவது, நவ.12, 13 மற்றும் 26,27 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்ட சிறப்பு முகாம், தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர் பெயர் சேர்க்க6ஏ, ஆதார் எண் இணைக்க 6 பி, பெயர் நீக்கத்துக்கு 7, தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவை பெறப்பட்டன. இதில் பெயர் சேர்க்க மட்டும் 4 லட்சத்து 44,019 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுதவிர, பெயரை நீக்க 77,698 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 30,614 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைக்க 57,943 பேர் படிவம் அளித்துள்ளனர். வரும் நவ,26, 27-ம் தேதிகளில் 2-ம் கட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்கள் மட்டுமின்றி, வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் நேரடியாகவும், தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல், வாக்காளர் பதிவு செயலி மூலமும் வாக்காளர்கள் திருத்தம் மேற்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment