Published : 11 Nov 2022 12:37 PM
Last Updated : 11 Nov 2022 12:37 PM

தமிழகத்தில் 36 மாவட்டங்களில் 12.15 மி.மீ. மழை பதிவு; தி.மலையில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவர் மரணம் அடைந்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (நவ.10) தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் 12.15 மி.மீ. மழை பெய்துள்ளது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பு பதிவாகி உள்ளது. இறந்த நபரது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக நேற்று 20 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 40 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 906 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ‘சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இவ்வலுவலக இ.இ. 1 (4) / 558 / 2022, நாள் 9-11-2022-ன்படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை முதல் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில். ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் 42 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதத் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் நிலைநிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ.1 ஆம் தேதி முதல் நவ.10ம் தேதிவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 497 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 437 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 60 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கத்தில் 19.87 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கத்திற்கு 330 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 677 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில் 18.64 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது." என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x