Published : 28 Oct 2022 06:06 AM
Last Updated : 28 Oct 2022 06:06 AM

தமிழகத்தில் நவ.4 வரை பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது. வரும் நவ. 4-ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தற்போதைய வானிலை நிலவரப்படி, வடதமிழகப் பகுதிகளில் காற்றின் போக்கு மாறி, காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதனால் தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரப்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை அக்.29-ல் (நாளை) தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது.

இதனால், தமிழகம், புதுச்சேரியில் நவ.4 வரை பரவலாக, மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிருஇடங்களில் கனமழை பெய்யலாம்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதனால் அக். 28-ல் (இன்று) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அக்.29-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30-ம் தேதி நீலகிரி, கோவை,திருப்பூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். வரும்31-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x