Published : 26 Oct 2022 07:10 PM
Last Updated : 26 Oct 2022 07:10 PM
ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் வரும் அக்.30-ம் தேதி விடுதலைப் போராட்ட தியாகி முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில், இன்று பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதி தனி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலையில், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட 5 டிஐஜிக்கள், 28 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறியது: "தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். போலீஸார் அக்.27 முதல் 30-ம் தேதி வரை பணியில் ஈடுபடுவர். தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்கள், வாகனங்களை, கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கபடும். பசும்பொன்னில் கண்காணிப்பு பணியில் 13 ட்ரோன் கேமராக்கள், 92 நிரந்தரக் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment