Published : 26 Oct 2022 06:48 AM
Last Updated : 26 Oct 2022 06:48 AM

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.708.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் பலர் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலம் என்பதால் மது விற்பனை அதிகரிப்பது வழக்கமாகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு, ஊரடங்கு அமல் போன்ற கட்டுப்பாடுகளால் மது விற்பனை பெரிய அளவில் இல்லை. தற்போது அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாததால், வழக்கத்தை விட மது விற்பனை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. இதற்காக போதிய மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சனிக்கிழமை, ஞாயிறு, திங்கள் என 3 நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.708.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.153.91 கோடிக்கும், சேலத்தில் ரூ.142.39 கோடிக்கும், திருச்சியில் ரூ.139.80 கோடிக்கும், சென்னையில் ரூ.138.96 கோடிக்கும், கோவையில் ரூ.133.31 கோடிக்கும் மது விற்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நேற்று முன்தினம் திங்கள் கிழமை ஒரேநாளில் மட்டும் ரூ.244.08 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் ரூ.52.87 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. அடுத்ததாக சேலம் ரூ.49.21 கோடி, சென்னை ரூ.48.80 கோடி, திருச்சி ரூ.47.78 கோடி, கோவை ரூ.45.42 கோடி மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கடந்தாண்டு தீபாவளி மது விற்பனை ரூ.431 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x