Last Updated : 23 Oct, 2022 11:21 PM

 

Published : 23 Oct 2022 11:21 PM
Last Updated : 23 Oct 2022 11:21 PM

கோவை | உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு மருந்துகள் பறிமுதல்: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

வெடித்த கார் | டிஜிபி சைலேந்திரபாபு

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கோவையில் ஞாயிறு (24-ம் தேதி) இரவு 8 மணிக்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது. காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் உயிரிழப்பு, வெடிபொருள் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் உயிரிழந்த நபர் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபின் (25) எனத் தெரியவந்தது. காரில் சில தடயங்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன. அதில் ஆணிகள், கோலி குண்டுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. காரில் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு தடய அறிவியல் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஜமேஷா முபினின் வீட்டை சோதனை செய்த போது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது முன்னரே வழக்குகள் இல்லை. இவர் தொடர்புடைய நபர்களிடம் விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் உயிரிழந்தவர் யார் என கண்டறிந்துள்ளோம்.

இதில் தொடர்புடைய காரை முதலில் வாங்கிய நபருக்கும், கடைசி நபருக்கும் இடையே 9 பேருக்கு தொடர்புள்ளது. 10-வது நபர் தான் காரை இவருக்கு கொடுத்துள்ளார். சிலிண்டர் எங்கிருந்து வந்துள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளோம். 6 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

காவல்துறையினர் சோதனை தீவிரமாக இருந்ததால் அவரால் தப்பிச் செல்ல முடியவில்லை. ஜமேஷா முபினிடம் சில ஆண்டுகளாக தொடர்பு வளையத்தில் இருந்த நபர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். எங்கு சென்று கொண்டிருந்தார் என்பது புலன் விசாரணையின் இறுதியில் தான் தெரியவரும். அவர் என்ன திட்டமிட்டிருந்தார் என்பதும் நமக்கு தெரியவில்லை. தற்கொலை தாக்குதலுக்கு வாய்ப்பு குறைவு. இந்த வழக்கில் நிறைய முன்னேற்றம் உள்ளது. என்.ஐ.ஏ விசாரணை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1.10 லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x